Wednesday 27 January 2016

ஆண்டு முழுவதும் ஒரே விதமான உணவை உண்ணும் பழக்கம் உடலுக்கு நல்லதல்ல.


2011-09-07-1417-46(52).jpg

நோயற்ற நல்ல உடல் நிலையில் நீங்கள் இருந்தாலும், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப உடலில் வாதம், பித்தம், கபம் எனும் இயக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
அவைகளுக்கு தக்கபடி உணவு முறைகளையும் மாற்றுவதே ஆரோக்கியமான வாழ்க்கை முறை. ஆண்டு முழுவதும் ஒரே விதமான உணவை உண்ணும் பழக்கம் உடலுக்கு நல்லதல்ல.
சரி, முதலில் ஒரு ஆண்டில் என்னென்ன பருவ மாற்றங்கள் வருகின்றன என பார்ப்போம்.
munpanikaalam2

ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்துள்ளோம்.
கார்காலம் – ஆகத்து – செப்டம்பர்
கூதிர் காலம் – அக்டோபர் – நவம்பர்
முன்பனிக்காலம் – திசம்பர் – சனவரி
பின்பனிக்காலம். – பிப்ரவரி – மார்ச்சு
இளவேனில் காலம் – ஏப்ரல் – மே
முதுவேனில் காலம் – சூன் – சூலை
இனி எந்தெந்த காலங்களில் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அதற்கேற்ப உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.
முதலில் இப்போது நடந்து கொண்டிருக்கும் பனிக்காலத்தை பார்ப்போம்.

முன்பனிக்காலம்:

munpanikaalam3

இந்தப் பருவத்தில் கீழ்க்காற்று வீசும். உடல் குளிர்ச்சி அடையும். புறச்சூல்நிலையோடு நேரடி தொடர்பில் உள்ள தோல் சுருங்கும். மயிர் துவாரங்கள் மூடும். எனவே உடல் உட்சூடு மிகுந்து பசி அதிகரிக்கும். இக்காலத்தில் காலையில் வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிடலாம்.
இக்காலத்தில் உடலில் வாதம் அதிகரிக்க துவங்கும், எனவே வாதத்தை நீக்கக்கூடிய தைலங்களை தலையிலும் உடலிலும் தேய்த்து வெந்நீரில் குளிப்பது நல்லது.
நெய்பசையுள்ள உணவை இக்காலத்தில் உண்ணவேண்டும்.
இக்காலத்தில் வியர்த்தல் நல்லது. எனவே மாலையில் வெயிலில் நடந்து வியர்வை வரும்படி செய்வது நல்லது.
இக்காலத்தில் தரை குளிர்ச்சியாக இருக்கும், எனவே வீட்டிற்கு உள்ளேயும் செருப்பு அணிந்து நடப்பது நல்லது.
இரவில் உறங்கும் போது தலையை தவிர உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு படுப்பது நல்லது.
(நமக்காக இத்தனை அக்கறை எடுத்துக்கொள்ளும் நாம் இந்த குளிர் காலத்தில் நடைபாதையில் படுத்திருப்பவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதையும் சேர்த்து செயல்படுத்துவதே உண்மையான முழுமையான ஆரோக்கியம்)
பொதுவாக இக்காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்பு சுவைகள் நல்லது. நெய் தன்மையும் குளிர்ச்சியும் உள்ளவை நல்லது.
munpanikaalam4
பின்பனிக்காலம்:

பின்பனிக்காலத்தில் உடலுள் கபம் அதிகரிக்கும்.
முன்பனிக்காலத்திற்கு சொன்ன அதே உணவும் செயல்முறைகளும் பின்பனிக்காலத்திற்கும் பொருந்தும்.
பொதுவாக இக்காலத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் நல்லது.

இளவேனில் காலம்:

பின்பனிக்காலத்தில் உடலில் அதிகரித்த கபம் இளவேனில் காலத்தில் இன்னும் அதிகரித்து, அதனால் பசி மந்தப்படும். கோழை அதிகரிக்கும்.
இக்காலத்தில் சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் வாந்தி உண்டாக்கும் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இக்காலத்தில் நசிய சிகிச்சை செய்துகொள்வது நல்லது (மூக்கில் மூலிகை சாற்றின் சொட்டுக்களை விடும் சிகிச்சை முறை)
இக்காலத்தில் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
பகலில் உறங்குவதை இக்காலத்தில் செய்யக்கூடாது. அதேபோல இக்காலங்களில் இரவில் விழித்திருக்க கூடாது.
பொதுவாக இக்காலத்தில் கசப்பு, காரம், துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் நல்லது. வறட்சியான மற்றும் சூடுள்ள உணவு நல்லது.

முதுவேனிற்காலம்:

இக்காலத்தில் வெப்பம் அதிகரிக்கும், எனவே. உடலில் உள்ள கோழை உலர்ந்து வாதம் அதிகரிக்கும். புளிப்பு மற்றும் காரமான உணவுகளை இக்காலத்தில் தவிர்க்க வேண்டும். சம்பா அரிசி வகைகள் உண்பது நல்லது.
நெய்பசையும் நீர்ச்சத்தும் உள்ள உணவுகள் இக்காலத்துக்கு நல்லது. வாழை, மாதுளை, திராட்சை, கரும்புச்சாறு, பனங்கற்கண்டு போன்றவை எடுத்துக்கொள்வது நல்லது.
பொதுவாக இக்காலத்தில் இனிப்பு சுவையுள்ள உணவுப்பொருள் நல்லது. நெய்ப்பசையுள்ள உணவும் குளிர்ச்சியான உணவும் நல்லது.

கார்காலம்:

munpanikaalam6

அதாவது மழைக்காலம்.

இக்காலத்தில் உடலில் பித்தம் அதிகரிக்க ஆரம்பிக்கும். மேலும் மற்ற இரண்டு குற்றங்களும் கூடும். நீண்டகாலம் நிலம் சூடாக இருந்து அதைத் தொடர்ந்து மழை பெய்வதால், நீர் புளிப்புத் தன்மை அடைகிறது. அதாவது நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.
இக்காலத்தில் பேதியை உண்டாகும் மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. இக்காலத்தில் நெய்பபசையுள்ள உணவுகளை நீக்க வேண்டும்.
உடலில் நீராவி மற்றும் குளிர்ச்சி படுவதை தவிர்க்க வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவையே உண்ணவேண்டும்.
பொதுவாக இக்காலத்தில் இனிப்பு, புளிப்பு, உப்பு சுவையுள்ள உணவுப்பொருள் நல்லவை.

கூதிர் காலம்:

இக்காலத்தில் தயிர், எண்ணெய், கொழுப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிக உப்புள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும். வயிறு நிறைய உண்ணக்கூடாது.
பொதுவாக இக்காலத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
munpanikaalam5

எல்லாக் காலங்களிலும் ஆறுசுவைகளும் உணவில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனாலும் அந்தந்த காலங்களில் மேற்கூறிய சுவைகளை அதிகமாக எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr.Jerome -FI

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com
முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts

சித்த மருத்துவம் ஒன்றும் முற்றிய நோய்களுக்கான மருத்துவமல்ல



mutriya noikkaana maruthhuvam4

எந்த நோயானாலும் சரி, அதற்கு ஆரம்ப நிலையிலேயே சித்தமருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் சுலபமாக சரிசெய்துவிட முடியும். அதுமட்டுமல்ல, அந்நோய் மீண்டும் வராமலே தடுத்துவிடவும் முடியும்.
ஆனால், என் அனுபவத்தில் நோயாளிகளிடம் நான் பார்க்கும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், முதலில் ஏதேனும் ஒரு மருத்துவ முறையைப் பார்க்க வேண்டியது, (ஒருவேளை அந்த மருத்துவ முறையில் அந்த நோயை குணமாக்கக்கூடிய மருந்துகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். மாறாக வெறும் நிவாரணம் மட்டும் இருக்கலாம்) இப்படியே பல ஆண்டுகள் தொடர்ந்து அந்த மருத்துவ முறையிலேயே சிகிச்சை எடுப்பர். இதற்குள் நோய் முற்றிவிடும். பிறகு மாற்று மருத்துவம் ஏதாவது செய்து பார்க்கலாமே என்று முடிவெடுத்து சித்த மருத்துவரிடம் வருவர்.
எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி, நோய் மிகவும் முற்றிய நிலையில் குணமாக்குவது கடினம்.
ஒரு சில நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே சிறந்தது.
“என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே நல்லது” என்ற கட்டுரையில் (இந்த கட்டுரை (http://siragu.com/?p=18084) இந்த இணையதளத்திலேயே உள்ளது) இந்த நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது.
ஒரு உதாரணத்திற்கு வெண்புள்ளி நோயை வைத்து விளக்குகிறேன்.
வெண்புள்ளி நோயை சித்த மருத்துவத்தில் எளிதாக குணப்படுத்தி விடமுடியும். ஆனால்,

mutriya noikkaana maruthhuvam5
•    நோய் ஆரம்பிக்கும் போதே உதடு, ஆண்குறி போன்ற இடங்களில் தோன்றினால் குணமாவது கடினம்.

mutriya noikkaana maruthhuvam6

•  வெண்படை உள்ள இடத்தில் உள்ள தோல் மட்டுமல்லாமல், அந்த இடங்களில் உள்ள முடிகளும் (Hair) சேர்ந்து வெண்நிறம் அடைந்தால் நோய் குணமாவது கடினம்.
இப்படி ஒவ்வொரு நோயையும் ஒருசில குறிகுணங்களைக் கொண்டு அந்நோயை எளிதாக குணப்படுத்த முடியுமா, அல்லது கடினமா, அல்லது குணப்படுத்தவே முடியாதா என முன் கூட்டியே கணிக்க முடியும்.
இங்கு நான் கூற வருகிற முக்கியமான செய்தி என்னவென்றால், வெண்புள்ளி நோயில் மேற்கூறிய குறிகுணங்கள் இல்லாமல் எளிதில் குணமாகக்கூடிய வகையைச் சேர்ந்த வெண்புள்ளி நோயாக இருந்தாலும், நோய் ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தாலும் குணமாவது கடினம்.
ஒரு உதாரணத்திற்காகத்தான் வெண்புள்ளி நோயை இங்கே குறிப்பிட்டேன். இதேபோல ஒவ்வொரு நோயிலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேலும் சிகிச்சை எடுக்காமல் அல்லது சரியான சிகிச்சை எடுக்காமல் வைத்திருந்தால் குணமாகாத நிலைக்கு சென்றுவிடும். அதன் பிறகு மருந்துகளோடு போராடி பயனில்லை.
இந்த இடத்தில் இன்னொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா நோய்களுக்குமே தீரும் நிலை, தீரா நிலை என்ற வேறுபாடு உள்ளது.
தீரும் நிலை, தீரா நிலை என்றால் என்ன?
ஒவ்வொரு நோய்க்கும் பல குறிகுணங்கள் இருக்கும். அந்த குறிகுணங்களில் ஒரு சில குறிகுணங்களைக் கொண்டு இந்த நோய் குணமாகும், அல்லது இந்த நோய் முறையாக தொடர்ந்து இத்தனை காலம் மருந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும், அல்லது இந்த நோய் குணமாகாது என முதலிலேயே முடிவுக்கு வரமுடியும்.
ஆக எல்லா நோய்களையுமே ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.
அதே போல எல்லா நோய்களுமே அதாவது எளிதில் குணமாகும் என்ற நிலையில் உள்ள நோய்கள்கூட, மிக முற்றிய நிலையில் குணமாவது கடினம்.
அப்படியிருக்க நோய் வந்தவுடன் ஒரு மருத்துவமுறையை பின்பற்றிவிட்டு, பிறகு நோய் முற்றிய நிலையில் இதற்கு சித்த மருத்துவம் செய்து பார்ப்போமே என்று வருவது புத்திசாலித்தனம் அல்ல.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com
முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts

உங்கள் உடலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்



2011-09-07-1417-46(52).jpg

உடலில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் எல்லா உடல்களும் ஒரே மாதிரியானவைதான். ஆனால் செயல் அடிப்படையில் மூன்று விதமான உடல் வாகு உள்ளது.
  1. வாத உடல்
  2. பித்த உடல்
  3. கப உடல்
இதில் உங்கள் உடல் எந்த வகையானது என உங்களுக்குத் தெரியுமா?
எவ்வாறு மூன்று விதமான உடல் உருவாகிறது?
moondru vidha udal3


ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்தே கரு உருவாகிறது. அவ்வாறு உருவாகும் நேரத்தில் வாதம், பித்தம், கபம் எனும் மூன்று இயக்கங்களில் எந்த இயக்கம் அதிகமாக செயல்படுகிறதோ அந்த அடிப்படையிலேயே அந்த கரு, உடலாக உருவாகிறது.
வாதம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வரும் உடல் வாத உடலாகவும்,பித்தம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வளரும் உடல் பித்த உடலாகவும்,கபம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வரும் உடல் கப உடலாகவும் அமைகிறது.
இவைமட்டுமல்லாது கலப்பு உடல் அமைப்பும் உள்ளது. இவற்றையெல்லாம் மிகச் சரியாகக் கூறவேண்டுமானால் அடிப்படையாக நாடியை பரிசோதிக்க வேண்டும். மேலும் பல பரிசோதனைகளின் மூலமே ஒருவர் என்ன தேக நிலையை உடையவர் என கூற முடியும்.
ஆனாலும் சில பொதுவான குறிகுணங்களைக் கொண்டு தேக நிலையை வகைப்படுத்தலாம்.


moondru vidha udal1

வாத உடலினர் எப்படி இருப்பர்:

-மெலிந்து உயர்ந்த உடல்.
-பருத்த அடித்தொடைகள்.
-நடக்கும்போது மூட்டுகளில் ‘டக்’ என சத்தம் வருதல்.
-தடித்த இமைகள்.
-கறுத்து, முனை பிளந்த தலைமுடி.
-கருமை வெண்மை கலந்த உடல் நிறம்.
-இனிப்பு, புளிப்பு, உப்பு, சூடுள்ள பொருள்களில் விருப்பம்.
-குளிர்ச்சியான பொருட்கள் பிடிக்காது.
-அதிகம் சாப்பிடுவர் ஆனாலும் உடல் வலிமை குறைவாகவே இருக்கும்.
-உணர்ச்சி, அறிவு ஆகியவை நிலையில்லாதது.
-இசை, விளையாட்டு, அவமதிப்புச்சிரிப்பு போன்றவற்றில் விருப்பம் இருக்கும்.
-ஈகை குணம் காணப்படாது.
-புலமைத் திறமை இருக்கும்.


பித்த உடலினர் எப்படி இருப்பர்:

-உடலில் எப்போதும் வெப்பம், வியர்வை காணப்படும்.
-உள்ளங்கை,உள்ளங்கால் சிவந்தும் மஞ்சள் நிறம் பெற்றும் இருக்கும்.
-இமைகள் மெல்லியதாய் இருக்கும்.
-வெயில்,கோபம் இவற்றால் கண்கள் சீக்கிரம் சிவந்துவிடும்.
-மது அருந்தினால் கண்கள் விரைவில் சிவந்துவிடும்.
-தலைமுடி சற்று மஞ்சள் நிறத்தில்(செம்பட்டை) காணப்படும்.
-உடலில் உரோமங்கள் குறைவாகக் காணப்படும்.
-சீக்கிரம் நரைக்கும்.
-இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, குளிர்ச்சியான பொருட்கள் பிடிக்கும்.
-பசி, தாகம், சூடு ஆகியவற்றை தாங்கிக் கொள்ள முடியாது.
-தைரியம், எதிலும் வெறுப்பு, தர்மகுணம், அறிவாற்றல் ஆகியவை இருக்கும்.

கப உடலினர் எப்படி இருப்பர்:

-பருத்த உடல்
-பரந்த நெற்றி
-கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியவைகளில் விருப்பம்
-சூடான உணவை விரும்புவர்.
-பசி, தாகம் பொறுத்துக்கொள்வர்.
-உடல் வலிமை இருக்கும்.
-குறைந்த அளவே சாப்பிடுவர்.
-அமைதியான குணம்

இவை தவிர,
வாத பித்த தேகம்
வாத கப தேகம்
பித்த வாத தேகம்
பித்த கப தேகம்
கப பித்த தேகம்
கப வாத தேகம்
என கலப்பு உடலினரும் உள்ளனர்.
எனவே மேலே கூறிய ஒன்றிரண்டு குறிகுணங்களை மட்டும் வைத்து ஒருவர் இந்த வகையான உடல் அமைப்புடையவர்கள் என சட்டென முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
ஆனாலும் அடிப்படையில் மூன்று விதமான உடல் இயங்கியல் உள்ளது என்பதை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகத்தான் இந்த கட்டுரை.

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com
முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts