மருத்துவம் தான் பயில வேண்டும், அதிலும் தமிழின் மீது கொண்ட வேட்கையால் சித்த மருத்துவத்தை விரும்பி,1992ல் நான் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பொழுது, ‘சித்தா’ என்றால் என்ன? என்று பலர் கேட்ட கேள்விகள் என்னை சோர்வுறச் செய்திருக்கின்றன. B.S.M.S முடித்த பிறகு, சித்த மருத்துவமனையை சென்னையில் துவங்கியபோதும் சித்த மருத்துவத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த சற்று போராடவே வேண்டியிருந்தது. பத்து வருட அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் சித்த மருத்துவர் பேரறிஞர்(M.D) முடித்து, இன்றைய சூழ்நிலையை 1992ஆம் வருட நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது எவ்வளவோ மாற்றம் மக்கள் மத்தியில் வந்திருக்கிறது. கைக்குழந்தைகளுக்கும் சித்த மருத்துவ முறையிலேயே சிகிச்சை தாருங்கள் என்று என்னிடம் கேட்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் சித்த மருத்துவம் பற்றிய ‘அறிமுகம்’ விரிவடைந்திருக்கிறது.
இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ மாற்றங்கள். கல்லூரி படித்த காலத்தில் நாங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக உருவான ‘தேசிய சித்த மருத்துவ நிறுவனம்’(தாம்பரம்-சென்னை), பன்றிக் காய்ச்சலுக்கு அலோபதி மருத்துவ மனைகளிலேயே ‘நிலவேம்புக் குடிநீர்’ கொடுத்தது என ஆக்கப்பூர்வமானப் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம்.
இவற்றையெல்லாம் நினைத்து மகிழ்ச்சி அடைகின்ற அதே வேளையில் ஒரு சில விசயங்கள் சில தவறான சமிக்ஞைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தவறான சமிக்ஞைகளை சரிசெய்ய வேண்டிய கடமை என்னைப் போன்ற சித்த மருத்துவர்களுக்கும், இந்த இணையத்தைப் போன்ற ஊடகங்களுக்கும் உள்ளன. அதற்காகத்தான் இந்த கட்டுரை.
என்ன அந்தத் தவறான சமிக்ஞைகள்?
ஒரு புது வெள்ளம் போல சித்த மருத்துவம் பற்றிய ‘அறிமுகம்’ பெருகி ஓடி வருகிறது. வழக்கம் போல புது வெள்ளத்தில் வரும் குப்பைகள் போல தவறான கருத்துக்களும் சித்த மருத்துவத்தைப் பற்றி பரவ ஆரம்பித்திருக்கின்றது.
அதாவது சித்த மருத்துவத்தைப் பற்றிய ‘அறிமுகம்’ கிடைத்திருக்கிறதே தவிர, ‘சரியான அறிமுகம்’ கிடைக்கவில்லை.
ஒரு சில தவறான கருத்துக்களை சரி செய்வதற்கு இந்த கட்டுரை பயன்படுமானால், அது சித்த மருத்துவத்திற்கான வெற்றியை விரைவுபடுத்துவதற்கு ஒரு கருவியாக அமையும்.
முதல் தவறான கருத்து:
சித்த மருத்துவம் ஒரு மூலிகை மருத்துவம்(Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.
சில ஊடகங்களும் கூட சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என ஒரு உருவகத்தை உண்டாக்குகின்றன. இது முற்றிலும் தவறு.
சித்த மருந்துகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, உலோகங்கள்(Metals), உபரசங்கள், தாதுஉப்புக்கள், நவமணிகள்(Nine gems), பஞ்சசூதப் பாசாணங்கள், மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
உலோகங்கள் என எடுத்துக் கொண்டால் இரும்பு, காரீயம், வெள்ளி, தங்கம் என 11 வகையான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் இன்று Maggi-யில் அதிக அளவில் இருப்பதாகக்கூறி தடைசெய்யப்பட்டுள்ள ‘காரீயம்’(Lead) கூட ஒரு மருந்துச் சரக்காக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால் (Arsenic Compound), கந்தகம்(Sulphur), வெள்ளைப் பாசாணம்(White Arsenic), மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உப்புகள் என எடுத்துக்கொண்டால் இந்துப்பு(Rock Salt), கல்லுப்பு(Asphalt), சீனாக்காரம்(Aluminum potassium sulphate), சூடன்(camphor), நவச்சாரம்(Ammonia Chloride), பச்சைக் கற்பூரம், வெங்காரம் (Borax), வெடியுப்பு(Potassium Nitrate) போன்ற 25 விதமான வேதிப்பொருட்கள் சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் 120 வகையான உபரசங்கள் (Secondary Minarals) சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக சொல்லவேண்டுமானால் பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துச் சரக்குகளான ரசம்(Mercury), ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம்(hydrargyrum Perchloride) போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருந்தோமே இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால் (Chemicals), அது பக்க விளைவை ஏற்படுத்தாதா?, அவை பாதுகாப்பானதா? என நீங்கள் யோசிக்கலாம்.
நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனென்றால் ஒவ்வொரு மருந்துச் சரக்கையும் (Raw Drug) பயன்படுத்துவதற்குமுன் அது சுத்தி(Purification) செய்யப்படுகிறது.
அதாவது அதிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் சுத்தி எனப்படுகிறது.
ஒவ்வொரு சரக்கிற்கும் பல்வேறு சுத்தி முறைகளை சித்த மருத்துவ முன்னோடிகள் கூறிச்சென்றுள்ளனர்.
உதாரணத்திற்கு இன்று ‘Maggi’-யில்அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் Lead என்ற காரீயத்தின் சுத்தி முறையை மட்டும் கூறுகிறேன். ஐவேலிச் சமூலச்சாறு, அதாவது Diplocyclos Palmatus என்ற தாவரத்தின் சாற்றினை பயன்படுத்தி காரீயத்தை சுத்தி கொள்ளலாம்.
மேலும் நொச்சி சாற்றினைப் பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். மேலும் வெள்ளாட்டின் சிறுநீர் மற்றும் பிரண்டையை பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம்.
இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. அவற்றைத்தான் நாங்கள் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல.
ஆக, சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள்(Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகள்(Herbo mineral).
இவை மட்டுமல்லாது உயிரினங்களிலிருந்தும் மருந்துச் சரக்குகளை பயன்படுத்துகிறது சித்த மருத்துவம்.
உதாரணமாக ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சித்த மருத்துவத்தின் உண்மை வீரியம் இப்படி கடல் அளவு இருக்கும் பொழுது, கடற்கரையில் கிடக்கும் சிப்பியை மட்டும் பார்த்து இதுதான் கடலில் இருக்கிறது என்பது போல, ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம் என்பது போன்ற கருத்துக்களை மாற்றுவதற்கே இந்தக் கட்டுரை.
இன்னும் சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான அறிமுகம் தொடரும்.
மேலும் தொடர்புக்கு:
Dr.ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
Doctors Plazza,
Opposite to Saravana Stores,
Near Velachery busstand,
Velachery, Chennai.
Ph.No: 944431729
No comments:
Post a Comment